UPDATED : ஜன 21, 2024 06:47 AM
ADDED : ஜன 21, 2024 06:46 AM

''கட்சி பாகுபாடு பார்க்காம, அறிமுக நடிகரை பாராட்டினாருல்லா...'' என்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''வெளிநாடுகளில் வேலை பார்க்குற தமிழர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுதாங்கன்னு, ஆஸ்திரேலிய தமிழர்களின் வாழ்க்கை குறித்து, காழ் என்ற சினிமாவை தயாரிச்சிருக்காவ...
''இதில், தமிழக காங்., பொது செயலர் சுமதி அன்பரசுவின் மகன் சித்தார்த் அன்பரசு, மறைந்த பாடகர் மலேஷியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் நடிச்சிருக்காவ வே...
''படத்தின், 'ப்ரீவியூ' காட்சியை பார்க்க, நாம் தமிழர் கட்சி சீமானை, சுமதி அன்பரசு நேர்ல போய் அழைச்சிருக்காங்க... காங்கிரசை
அரசியல் எதிரியா கருதுற சீமான் வருவாரோ, மாட்டாரோ என்ற சந்தேகத்தோட தான் இருந்தாங்க...
''ஆனா, கதையை கேள்விப்பட்ட சீமான், படத்தை பார்த்தது மட்டுமில்லாம, அதில் நடிச்ச சித்தார்த்தையும் பாராட்டிட்டு போயிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
![]() |
''போக்குவரத்து போலீசார் காட்டில் அடை மழை தான் போங்கோ...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஏரியான்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''சென்னை செங்குன்றம் போக்குவரத்து போலீசார், அபராதம் போட்டு பாக்கெட்டை நிரப்பறதுலயே கண்ணும் கருத்துமா இருக்கா...
''செங்குன்றம் போக்கு வரத்து எல்லை மீஞ்சூர் வரை இருக்கறதால, செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, புறவழிச்சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலைகளில் பண மழை கொட்டறது ஓய்...
''விதி மீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்க, 16 டிவைஸ்களை பயன்படுத்தி காசு கறந்துண்டு இருக்கா... எஸ்.ஐ.,க்கள் தான் இந்த இயந்திரத்தை பயன்படுத்தணும் ஓய்...
''ஆனா, கான்ஸ்டபிள் முதல் அதிகாரிகளின் கார் டிரைவர்கள் வரை, அத்தனை பேரும் இதை வச்சு, தனி வசூலை போட்டுண்டு இருக்கா... இதுக்காக, அதிகாரிகளுக்கு ஒரு இயந்திரத்துக்கு மாசம், 10,000 ரூபாய் கப்பம் கட்டறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மலைச்சாமி, இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''அரசு நிலங்களை அபகரிச்சவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்குதுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா ஆண்டியகவுண்டனுார் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலைத் தொடர் இருக்குதுங்க... இங்க, விவசாயிகளுக்கு அரசு கண்டிஷன் பட்டா கொடுத்துச்சு...
''ஆனா, தனி நபர் ஒருத்தர், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மோசடி ஆவணங்கள் வாயிலா ஆக்கிரமிச்சு இருக்காருங்க... விவசாயிகள், அரசு அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவும்
மறுக்குறாருங்க...
''இதனால, அங்க ஆய்வு நடத்துன வருவாய் துறை ஆர்.டி.ஓ., எல்லாம் மோசடி ஆவணம் என்பதை உறுதி செஞ்சிட்டாரு... இது சம்பந்தமா நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்குதுங்க...
''ஆனாலும், இந்த பகுதி எஸ்.ஐ., மோசடி நபருக்கு ஆதரவா அந்த நிலத்தில் கேட் அமைச்சு, கண்காணிப்பு கேமரா பொருத்தி, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு தர்றாருங்க...
''சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடக் கூடாதுன்னு ஏ.டி.ஜி.பி., அருண் அறிவுறுத்தியும், எஸ்.ஐ., அடாவடியா செயல்படுறதை யாரும் தட்டிக் கேட்க மாட்டேங்குறாங்க...'' என்ற அந்தோணிசாமி, ''அட, வாங்க சண்முகமூர்த்தி சார்...'' என, நண்பரிடம் பேச்சு கொடுக்க, சபை கலைந்தது.


