'கொல்லர்கள் மீது வழக்கு போடும் அதிகாரிகளுக்கு அரிவாள்கள் பரிசு'
'கொல்லர்கள் மீது வழக்கு போடும் அதிகாரிகளுக்கு அரிவாள்கள் பரிசு'
ADDED : ஆக 17, 2025 01:05 AM

திருநெல்வேலி, ஆக. 17--
இரும்பு பட்டறை நடத்துபவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு போடும் அதிகாரிகளுக்கு, குறைதீர் கூட்டத்தில், 100 அரிவாள்களை பரிசளிக்க உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி படுகொலைகள் நடப்பதற்கு அரிவாள்கள் கிடைப்பதே காரணம் எனக்கூறி, மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளத்தில் இரும்பு பட்டறை நடத்தி வரும் சுடலையாண்டி, 72, சேர்மவேல், 60, ராமசுப்பிரமணியம், 25, ஆகியோர் மீது போலீசார் ஆயுதச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
இதை கண்டித்து, நேற்று திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பசுமை பாரத மக்கள் இயக்கத்தின் சார்பில், வழக்கறிஞர் ஆறுமுகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஆறுமுகராஜ் பேசியதாவது:
கடந்த 1998ல் இதே போல ஜாதி வன்முறைகளுக்கு கொல்லர்கள் காரணம் என கூறி, செங்கோட்டையில் வழக்கு பதிவு செய்தனர்.
இதை கண்டித்து, கோர்ட் உத்தரவின் படி, பறிமுதல் செய்த 900 அரிவாள்கள் மீண்டும் திருப்பியளிக்கப்பட்டன; வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
இதில், தற்போது அரிவாள்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள ஷாப்பிங் நிறுவனங்களில் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, ஆன்லைனில் வாங்கிய 100 அரிவாள்களை மக்கள் குறைதீர் கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசாக வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.