மேற்கு தொடர்ச்சி மலை அருகே சித்த மருத்துவ பல்கலை: ஐகோர்ட்
மேற்கு தொடர்ச்சி மலை அருகே சித்த மருத்துவ பல்கலை: ஐகோர்ட்
ADDED : மார் 17, 2024 03:36 AM

மதுரை : 'சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலை அமைக்கும் முடிவை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைக்க இடம் கண்டறிய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவ கல்லுாரி உள்ளது.
இதன் பழைய கட்டடத்தை சீரமைக்க தடை விதித்தும், அங்கு இடவசதி இல்லாததால் செட்டிகுளத்தில் இந்திய மருத்துவ முறைகளுக்கான பல்கலையை அமைக்க நடவடிக்கை எடுக்கவும், 2020ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மாற்றியமைக்க கோரி, தமிழக சுகாதாரத்துறை சார்பில் மனு செய்யப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள்: தமிழகத்தின் முதல் சித்த மருத்துவ கல்லுாரி மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள குற்றாலத்தில் 1956ல் துவக்கப்பட்டது. அது, 1964ல் திருநெல்வேலிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்காலிக இடத்திலேயே, 60 ஆண்டு களாக தொடர்கிறது.
அவ்வளாகத்தில் போதிய இடவசதி இல்லை. இந்த மருத்துவ முறை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவானது.
கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையிலுள்ள சித்த மருத்துவ பல்கலை சட்டம் கொண்டு வந்த தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.
சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலை அமைக்கும் முடிவை, அரசு மறுபரிசீலனை செய்து, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைக்க தகுந்த இடத்தை கண்டறிய வேண்டும். இதனால், இந்திய மருத்துவ முறை வளர்ச்சியடையும். மனித குலத்திற்கு நன்மை பயக்கும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

