வெள்ளி கிலோவுக்கு ரூ.25,000 உயர்வு தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
வெள்ளி கிலோவுக்கு ரூ.25,000 உயர்வு தங்கம் சவரனுக்கு ரூ.5,200 அதிகரிப்பு
ADDED : மார் 01, 2026 05:38 AM

சென்னை : அமெரிக்கா, ஈரான் இடையே துவங்கியுள்ள போர் காரணமாக, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு 25,000 ரூபாயும், ஆபரண தங்கம் சவரனுக்கு 5,200 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால், கடந்த பிப்ரவரியில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டன.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,900 ரூபாய்க்கும், சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 295 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்தது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, 15,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து, 1,24,400 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 20,000 ரூபாய் அதிகரித்து, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதையடுத்து, ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு 25,000 ரூபாயும், சவரனுக்கு 5,200 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மற்றும் தங்கம் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரில், பல நாடுகள் இணைந்து விட்டன; இது, மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டுள்ளது.
இதனால், பாதுகாப்பு கருதி உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதனால், தங்கம் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மிகவும் அபரிமிதமாக உயரும்.
வெள்ளியிலும் முதலீடுகள் குவிவதால், அதன் விலையும் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

