ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு
ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு
ADDED : டிச 04, 2024 01:46 PM

சிங்கப்பூர் சிட்டி: பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 64 ஆகவும், மறு பணியமர்த்தப்படும் வயதுக்கான உச்சவரம்பு 69 ஆகவும் அதிகரித்து, சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள், திருமண வயது தள்ளிப்போவது, திருமணம் செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால், இங்கு இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் உடல் உழைப்புக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சூழலில், பணியாளர்கள் சட்டபூர்வமாக ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசு அறிவித்துள்ளது.
தற்போது ஓய்வு பெறும் வயது 63 ஆகவும், மீண்டும் பணியமர்த்தப்படும் வயது 68 ஆகவும் உள்ளது. புதிய விதிகளின் படி, ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்த்தப்படுகிறது. மீண்டும் பணியமர்த்தப்படுவோருக்கான வயது உச்சவரம்பு 69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 69 வயது வரை அவர்கள் பணியாற்ற முடியும். இந்த உத்தரவு வரும் 2026ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், 2030ம் ஆண்டு ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், மறு பணி அமர்வு செய்யப்படுவோருக்கான வயது உச்சவரம்பு 70 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தாலும், பொருளாதார நலன் கருதி பலரும் தொடர்ந்து வேலை செய்யவே விரும்புகின்றனர். அவர்களுக்கு வேலை அளிப்பதன் மூலம், பொருளாதாரம் மேம்படும்; அவர்களது பணி அனுபவம் நிறுவனங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என அரசு கருதுகிறது. அரசின் திட்டப்படி, வயதானவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசு மானிய நிதியுதவி வழங்கப்படும்.
'அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பகுதிநேர வேலைக்கு முதியவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். வயதானவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.78,75,785 மானியம் வழங்கப்படும்' என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.