சார் - பதிவாளர் மீது நடவடிக்கை தகவல் ஆணையம் உத்தரவு
சார் - பதிவாளர் மீது நடவடிக்கை தகவல் ஆணையம் உத்தரவு
ADDED : நவ 20, 2025 12:13 AM
சென்னை: 'மனுதாரர் கோரிய தகவல்களுக்கு, சம்பந்தமில்லாத தகவல்களை சமர்ப்பித்த சார்பதிவாளர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், வடக்கு மாதவி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் 2023ல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பெரம்பலுார், செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலக, பொதுத் தகவல் அலுவலருக்கு மனு அனுப்பினார். அதில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் அடையாள அட்டை உட்பட, 17 இனங்களில் தகவல் கேட்டிருந்தார்.
அதேபோல், 2023ல், மற்றொரு மனுவையும் அனுப்பி இருந்தார். அவர் கேட்ட தகவல் கிடைக்காததால், மனுதாரர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு, மனுதாரர் தினேஷ்குமார், செட்டிகுளம் சார்பதிவாளர் சிவனேசன் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பினரையும் விசாரித்த, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தகவல் கேட்டு விண்ணப்பித்த இரு மனுக்களுக்கும், பொது தகவல் அலுவலர் சிவனேசன் தகவல் வழங்கவில்லை. அதேபோல், ஆணையத்தின் விசாரணைக்கு எந்த ஒரு முன் தயாரிப்பும் இல்லாமல் ஆஜராகி இருந்தார். அவரால் வழக்கு சம்பந்தமான தகவலின் நகல்களை, ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க இயலவில்லை.
வழக்கிற்கு தொடர்பில்லாத தகவல்களை ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார். இதை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, ஆணையத்தின் முன், அலட்சிய போக்கோடு செயல்பட்ட செட்டிகுளம் சார்பதிவாளரும், பொதுத் தகவல் அலுவலருமான சிவனேசன் மீது, திருச்சி மண்டல பதிவுத்துறை தலைவர், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் விபரத்தை, டிச., 31ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

