UPDATED : ஜன 16, 2025 10:10 PM
ADDED : ஜன 16, 2025 06:44 PM

திருப்புத்தூர்: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டில், நால்வர் உயிரிழந்தனர்.
பொங்கலை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், புதுக்கோட்டை என பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள சிராவயல் பகுதியில் பொங்கலை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். இன்று(ஜன.,16) உரிய ஏற்பாடுகளுடன் மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், மாடு முட்டியதில் 177 பேருக்கு காயம் ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதில், சுப்பையா என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், நடுவிக்கோட்டையை சேர்ந்த சைனீஸ் ராஜா என்பவர், கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிக்க முயன்றார். அதில் தாமரைக்கொடியில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மங்கதேவன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த பெருமாள் என்ற முதியவர் உயிரிழந்தார். அலங்காநல்லுாரில் நடந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்க்க வந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்தார்.