ADDED : மார் 06, 2026 07:38 AM

சென்னை: தமிழக கவர்னர், நடிகை குஷ்பு ஆகியோரை, ஆபாசமாகப் பேசியதாக பதிவான வழக்கில், தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட, இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது நாள் பிறந்தநாள் பொதுக் கூட்டம், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 16ல் நடந்தது.
அதில், தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 63, தமிழக கவர்னர், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, ஆபாசமாகப் பேசினார்.
இதையடுத்து, ஆபாசமாக பேசுவது, கலகத்தை துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது என, நான்கு பிரிவுகளில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை, சென்னை 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்தார். மனுவில், 'சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த, 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி.பாண்டியராஜ், நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை, வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

