சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனை
சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனை
ADDED : நவ 01, 2024 04:21 AM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதத்திற்கும் மேல் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ரூ.6000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது.
இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றியுள்ளபகுதியில் நாக்பூர், சென்னை டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. ஏற்கனவே பெய்த மழை, அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்தது.
சரவெடி தயாரிக்க கூடாது; பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட் பயன்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் வெரைட்டி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் மக்கள் விரும்பும் வகையில் புது ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளின் 90 சதவீதத்திற்கும் மேல் விற்பனையாகி, ரூ.6000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்தது. உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா ) தலைவர் கணேசன் கூறுகையில், ''இந்தாண்டு தீபாவளிக்கு பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி சதவீதம் குறைந்தது. மக்கள் விரும்பும் வெரைட்டி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் 90 சதவீதத்திற்கும் மேல் விற்பனையானது. கடந்த ஆண்டு போலவே இந்தாண்டும் வர்த்தகமும் நன்றாக நடந்தது'' என்றார்.