ADDED : பிப் 14, 2026 07:09 AM

சென்னை: வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில், இரிடியம் விற்ற பணம், இந்திய ரிசர்வ் வங்கி வாயிலாக வர உள்ளது எனக் கூறி, கிருஷ்ணகிரியை சேர்ந்தவரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, சி.பி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், பீஹார், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த கும்பல், புகார்தாரரை டில்லிக்கு அழைத்து, போலி ரிசர்வ் வங்கி அடையாள அட்டையை காண்பித்து, பணம் பெற்றுள்ளனர். இவர்களை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது.
இதில், பீஹாரை சேர்ந்த சோனு குமார் துபே, ஆக் ஷிஸ் குமார், கோபால் சேகர், தெலுங்கானாவை சேர்ந்த ஜார்ஜ் தாமஸ், ஜார்கண்டை சேர்ந்த குல்க் ஷன் தரத், பெங்களூரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களில், 23 பேரிடமிருந்து, 5.65 கோடி ரூபாயை மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

