ADDED : பிப் 24, 2026 04:34 AM

சென்னை: 'ரயில்களில் மது அருந்தினாலோ, புகை பிடித்தாலோ, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணியர் சிலர், ரயில்களில் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். சிலர் புகை பிடித்து, சக பயணியருக்கு தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
முக் கிய ரயில் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக, மொபைல் போன், பர்ஸ், நகை திருட்டு தொடர்பாக பயணியர் புகார் கொடுப்பது அதிகரித்துள்ளது. புகார் அளிக்கும் போது, பயணியர் சிலர் ரயில்களில் மது குடிப்பதையும் தெரிவித்துள்ளனர். சிலர் புகை பிடிப்பதும், அது சக பயணியருக்கு தொந்தரவாக இருப்பதையும் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே சட்டம் 1989 பிரிவு 145ன்படி, ரயில்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது குற்றம். இது குறித்து, '139' என்ற உதவி எண்ணில் பயணியர் புகார் அளிக்கலாம். ரயில்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது உறுதி செய்யப்பட்டால், 500 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

