நகை மதிப்பீட்டாளர்களை கொத்தடிமையாக நடத்துவதா: சீமான் கேள்வி
நகை மதிப்பீட்டாளர்களை கொத்தடிமையாக நடத்துவதா: சீமான் கேள்வி
ADDED : நவ 14, 2024 02:36 PM

சென்னை: 'பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதா' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
அவரது அறிக்கை:
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் ஏதுமின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. வங்கிகளில் நூறு விழுக்காடு அளவிற்கு நகைக்கடன்கள் லாபத்தை தருவதுடன், முழுமையாகத் திரும்பப் பெறப்படும் கடன்களாகவும் உள்ளன. அந்த அளவிற்கு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் வங்கிகளின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆனால், நகை மதிப்பீட்டாளர்கள் பணியானது இதுவரை வரையறுக்கப்பட்ட பணியாக இல்லை என்பது பெருங்கொடுமையாகும்.
நகைகள் அடமானம்
வங்கிகளில் நகைக்கடன் பெறும் பொதுமக்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தரகு தொகையை மட்டுமே நகை மதிப்பீட்டாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறதே தவிர அவர்களுக்கென்று தனியாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக வங்கியில் நகைகள் அடமானம் வைக்கப்படாத நாட்களில் அவர்களுக்கு எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை. நிரந்தர பணியாக இல்லாத காரணத்தினால் வங்கி மேலாளர்களின் விருப்பப்படி செயல்பட கட்டாயப்படுத்தப்படுவதோடு, அப்படி செயல்படாத நிலையில் அவர்களின் கோபத்திற்கும், அதன் காரணமாகப் பணி இழக்கும் சூழலுக்கும் தள்ளப்படுகிதின்றனர்.
மருத்துவக் காப்பீடு
தற்காலிக பணியாளர் என்பதால் சுதந்திரமாகப் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற முடிவதில்லை என்பதால், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று நகை மதிப்பீட்டாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். மேலும், நகை மதிப்பீட்டாளர்களை தகுதித்தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், தொழிலாளர் வைப்புநிதி, மருத்துவக் காப்பீடு ஆகியவை வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிக மிக நியாயமானதே.
பணி நிரந்தரம்
பா.ஜ., அரசு பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூட்டணி பலத்தோடு பார்லிமென்டில் தமக்குள்ள 40 எம்.பி.,க்கள் பலத்தின் மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தி நகை மதிப்பீட்டாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.