மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் அரசுக்கு சிறு தொழில் சங்கங்கள் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் அரசுக்கு சிறு தொழில் சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 03:08 AM
சென்னை: மின் கட்டணம் நான்காவது ஆண்டாக உயர்த்தப்பட்டு உள்ளதால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தமிழக அரசு மீது கோபம் அடைந்துள்ளன.
எனவே, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் தர, அனைத்து தொழில் சங்கங்களும் ஓரணியில் திரண்டு வருகின்றன.
தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணத்தை, இம்மாதம் 1ம் தேதி முதல், 3.16 சதவீதம் உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதாவது, 2022 முதல் இந்தாண்டு வரை என, நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வாலும், அதனுடன் சேர்த்து வசூலிக்கப்படும் நிலை கட்டணம் உயர்வாலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு, 'கொடிசியா' எனப்படும், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் உட்பட 22 மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் சங்கங்களும், 35 தொழில் கூட்டமைப்புகளும் ஒன்றிணைந்து, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, கூட்டமைப்புகள் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தற்போது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 60 சதவீத அளவுக்கே இயங்கும் நிலை உள்ளது.
அதற்கு, 2022ல் இருந்து மின்சார நிலை கட்டணம் உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி 6 சதவீதம் உயர்வு போன்றவையே காரணம்.
இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள மின் கட்டண உயர்வும் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
தற்போது, மின் கட்டண உயர்வானது, சிறு, குறு நிறுவனங்களின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அத்துறையில் கூடுதல் நிதிச்சுமை, உற்பத்தி குறைவு, பெரும் அளவில் வேலை இழப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
எனவே, அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

