ADDED : மார் 18, 2025 05:45 AM

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து, மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் விலகிய நிலையில், சிறிய கட்சிகள், நா.த.க.,வில் இணைந்து வருகின்றன.
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப காலமாக, ஈ.வெ.ராமசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை விரும்பாத, நா.த.க., நிர்வாகிகள் சிலர், அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
அவர்களையும், அக்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும், ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சியில் இணைத்து வருகின்றனர். சிலர் விஜய் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இதனால், நா.த.க.,வின் கூடாரம் காலியாகி வருவதாக, மற்ற கட்சிகள் கூறி வரும் நிலையில், இதுகுறித்து கவலைப்படாமல், சீமான் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறார்.
நிர்வாகிகள் ஒரு சிலர் விலகினாலும், தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதை நிருபித்து வருகிறார். மேலும், கட்சியை பலப்படுத்தும் பணியை துவக்கி உள்ளார்.
இந்நிலையில், வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தலைமையில் இயங்கி வந்த தமிழர் கட்சி; அதியமான் தலைமையில் இயங்கி வந்த தமிழக முன்னேற்ற கழகம் போன்ற சிறிய கட்சிகள், நா.த.க.,வில் இணைந்து வருகின்றன.