ADDED : அக் 09, 2025 02:53 AM
சென்னை:'சிறைகளுக்குள் பிஸ்கட், பேரீச்சம் பழம் என, வெவ்வேறு பெயர்களில், பீடி கட்டுகள் கடத்தல் நடக்கிறது; இதை தடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஓய்வு பெற்ற சிறை காவலர்கள் சிலர் கூறியதாவது:
சிறைகளுக்குள் காவலர்களே, பிஸ்கட், பேரீச்சம் பழம் என, வெவ்வேறு பெயர்களில் பீடி கட்டுகளை கடத்துகின்றனர்.
சிறைகளில் உள்ள கேன்டீனுக்கு எடுத்து செல்லும் பொருட்களில் தான், பீடி கட்டுகளும் செல்கின்றன. இந்த பீடிகள் ஒரு கட்டு, 350 ரூபாய்க்கு கைதிகளுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு மத்திய சிறைகளிலும், ஒவ்வொரு நாளில் பீடி கட்டுகள் கடத்தப்படுகின்றன.
பீடிக்கு பதிலாக வேறு ஏதேனும் பொருட்கள் எடுத்து சென்றால், விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி விடும். சிறைகளில் அதிரடி சோதனை நடத்தி, பீடி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.