ஆன்லைன் விளையாட்டு சந்தா நிறுத்தம் ரூ.50,000 இழப்பீடு தர 'சோனி'க்கு உத்தரவு
ஆன்லைன் விளையாட்டு சந்தா நிறுத்தம் ரூ.50,000 இழப்பீடு தர 'சோனி'க்கு உத்தரவு
ADDED : ஏப் 24, 2025 11:51 PM
சென்னைகாரணமின்றி ஆன்லைன் விளையாட்டுக்கான சந்தாவை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, சோனி ஆன்லைன் விளையாட்டு நிறுவனம், 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சிதம்பரம், 25. இவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
ஆன்லைன் விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனத்தில், 2014ல் சந்தாதாரராக சேர்ந்தேன். ஆன்லைன் விளையாட்டுக்காக, ஒரு லட்சத்து, 58,247 ரூபாய் வரை பணம் செலவழித்து உள்ளேன்.
இந்நிலையில், எந்தவித காரணமும் தெரிவிக்காமல், இரண்டு மாதம் ஆன்லைன் விளையாட்டுக்கான சந்தா நிறுத்தி வைக்கப்படுவதாக, 2022ல் தகவல் வந்தது.
ஆன்லைன் விளையாட்டை வழங்கும், 'சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் ஐரோப்பா' என்ற நிறுவனம், சேவை குறைபாடுடன் நடந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, உரிய இழப்பீடாக, 14.80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பொழுது போக்கு நிறுவனம், மனுதாரர் விவகாரத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது. இதுபோல நடந்து கொள்வதும் சேவை குறைபாடு தான்.
எனவே, மனுதாரருக்கு பொழுதுபோக்கு நிறுவனம், இழப்பீடாக 50,000 ரூபாய்; வழக்கு செலவுக்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.