செந்தில்பாலாஜி குறித்த பேச்சு: வாபஸ் பெற்றார் அமைச்சர்
செந்தில்பாலாஜி குறித்த பேச்சு: வாபஸ் பெற்றார் அமைச்சர்
ADDED : ஆக 22, 2026 04:23 AM

சென்னை: தி.மு.க.,வினர் எதிர்ப்பை தொடர்ந்து, செந்தில் பாலாஜி குறித்த சர்ச்சை வார்த்தையை, அமைச்சர் நிர்மல்குமார் திரும்ப பெற்றார்.
சட்டசபையில், மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், தி.மு.க., - செந்தில்பாலாஜி பேசினார். துறையில் நிலவும் பிரச்னைகளை பட்டியலிட்டார்.
அப்போது, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குறுக்கிட்டு பேசும் போது, செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எழுந்து, ''அமைச்சர் கூறிய வார்த்தையை நீக்கி விட்டீர்களா,'' என, சபாநாயகரிடம் கேட்டார். அப்போது, மின்துறை அமைச்சர் குறித்து, அவர் சொன்ன வார்த்தைக்கு, ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு அமைச்சர் நிர்மல்குமார், ''மூன்று மணி நேரம் கழிப்பறையில் இருந்தது குறித்து, நானும் பேசுவேன்,'' என்றார். அத்துடன், செந்தில் பாலாஜி குறித்த வார்த்தையை திரும்பப் பெறுவதாகவும் கூறினார். அந்த வார்த்தையை சபைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக, சபாநாயகர் அறிவித்தார்.
மீண்டும் எழுந்த உதயநிதி, ''கழிப்பறையில் யார், எவ்வளவு நேரம் இருக்கின்றனர் என கணக்கெடுப்பதற்கு, தனி அமைச்சரை நியமித்துள்ளீர்களா,'' என, சபாநாயகரிடம் கேட்டார். ''இந்த பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்,'' எனக்கூறி, சபாநாயகர் முற்றுப்புள்ளி வைத்தார்.
