வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள்; கடந்து செல்வதாக கடிதம் எழுதினார் முதல்வர்!
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள்; கடந்து செல்வதாக கடிதம் எழுதினார் முதல்வர்!
ADDED : நவ 12, 2024 12:33 PM

சென்னை: 'வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்' என, தன் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது கடிதம்:
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு சாதாரண உழைப்பு போதாது, சதிகளை முறியடிக்கக்கூடிய சளைக்காத உழைப்பு தேவை என்பதை விருதுநகர் உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தேன். விருதுநகர் மாவட்டத்தில் கழகம் தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகளான விருதுநகர், திருச்சுழி மற்றும் ராஜபாளையம் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளையும் பாராட்டி, அந்த இரு தொகுதிகளின் வெற்றியைத் தக்க வைத்துக்கெள்வதுடன், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் 2026ல் நிச்சய வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் உழைக்க வேண்டியதை உங்களில் ஒருவனாக வலியுறுத்தினேன்.
தன் நிலை மறந்து விமர்சனம்
நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதல்வராக எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது. இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும் பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கருணாநிதி பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார்.
வயிற்றெரிச்சல்காரர்
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான். பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணியும் வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
சரித்திரம் தொடரட்டும்
மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.