தரத்தில் சமரசம் செய்ததில்லை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் உறுதி
தரத்தில் சமரசம் செய்ததில்லை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் உறுதி
ADDED : ஜன 15, 2026 07:41 AM

கோவை: ''ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், 45 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்கது. எப்போதும் சுத்தமான நெய்யால் இனிப்பு கார வகைகள் தயாரிக்கப்படுகின்றன. தரத்தில் எவ்விதத்திலும் சமரசம் செய்ததில்லை,'' என, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் 1979ல் துவக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்துடன் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்கிறோம்.
தமிழகம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என, 68 கிளைகள் உள்ளன. 50,000 சதுரடியில் உலகத்தரம் வாய்ந்த கிச்சன் செயல்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு இனிப்புகள் தயாராகின்றன.
சுத்தமான நெய்யால் தயாரிக்கப்படும் இனிப்புகளே, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.
பாதாம் அல்வா என்றால் பாதாம் பயன்படுத்தி தயாரிப்பது; சுத்தமான நெய் என்றால் சுத்தமான நெய் பயன்படுத்துவது. எந்த இடத்திலும், எவ்விதமான சூழலிலும் கலப்படத்துக்கு இடமில்லை; அதைப்பற்றி யோசிக்கக் கூட எங்களுக்குத் தெரியாது.
வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஸ்வீட்ஸின் தரம் மட்டுமின்றி, நாங்கள் பின்பற்றும் சத்தியம், எந்த இடத்திலும் தவறியதில்லை. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே சொத்து. அதன் மூலமே உலகம் முழுவதும் பேசப்படுகிறோம்.
எக்காரணம் கொண்டும், நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட மாட்டோம். தொழில் தர்மத்துக்கு விரோதமாக எப்போதும் எங்கள் தலைமுறையே செயல்படாது.
எப்.எஸ்.எஸ்.ஐ., என்கிற உணவு பாதுகாப்பு நிறுவனத்தின் சட்டத்தின் கீழ் அனைத்து உணவு நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். அனைத்து உணவு நிலையங்களிலும் உணவு பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த தயாரிப்பிலும் கலப்படம் இருப்பதாக எந்த ஆய்வக அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை.
ஆய்வு செய்யும்போது, மூலப்பொருட்களின் தரமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இது வேறு, விற்கும் பொருளை ஆய்வு செய்வது வேறு. தரம் குறைவது கலப்படம் கிடையாது. வனஸ்பதி கலந்திருப்பதாக தகவல் எவ்வாறு வெளியானதென தெரியவில்லை; யூகத்தின் அடிப்படையில் வெளியாகியிருக்கலாம்.
எப்.எஸ்.எஸ்.ஐ., அறிக்கையில் கிடையாது. எவ்வித அபராதமும் விதிக்கவில்லை. தொழிலுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உண்மையாக இருக்கிறோம். தொழில் தர்மத்துடன் செயல்படுவதால், தலை நிமிர்ந்து செயல்படுகிறோம். தரத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட விலகியதில்லை.
இவ்வாறு கூறினார்.

