இலங்கை அடாவடித்தனம்: மேலும் ஒரு ராமேஸ்வரம் மீனவருக்கு 6 மாதம் சிறை படகும் அரசுடைமையாக்கப்பட்டது
இலங்கை அடாவடித்தனம்: மேலும் ஒரு ராமேஸ்வரம் மீனவருக்கு 6 மாதம் சிறை படகும் அரசுடைமையாக்கப்பட்டது
ADDED : பிப் 23, 2024 02:44 AM

ராமேஸ்வரம்: இலங்கையில் மேலும் ஒரு ராமேஸ்வரம் மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன் படகையும் அரசுடைமையாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.,7ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளை பறிமுதல் செய்து அதிலிருந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 19 மீனவர்களை அந்நாட்டு போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் 18 மீனவர்களுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அதில் ஒரு படகின் டிரைவரான ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜால்சனுக்கு 42, ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் ஜால்சனை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.
ஒரு படகின் உரிமையாளர் சசிகுமார் கைதானதால் அவரது படகையும் அரசுடைமையாக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்றொரு படகின் உரிமையாளர் அலெக்ஸ் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி வழக்காடலாம் என நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் விடுதலையான 18 மீனவர்களையும் கொழும்பு அருகேவுள்ள முகாமில் போலீசார் தங்க வைத்துள்ளனர். இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.