'ஸ்ரீராமனே மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்': சொல்கிறார் மதுரை ஆதினம்
'ஸ்ரீராமனே மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்': சொல்கிறார் மதுரை ஆதினம்
ADDED : ஜன 23, 2024 04:09 AM

ராமநாதபுரம்: ''அடுத்த பிரதமர் மோடி தான். அவரை அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார். எதிர்த்து நிற்பவர்கள்டெபாசிட் இழப்பர்,'' என மதுரை ஆதினம் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா ராமநாதபுரத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற மதுரை ஆதினம் கூறியதாவது: பிரதமர் மோடி ஏன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என கேட்கின்றனர். திருமூலர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார். அது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தனர்.
ராஜீவ் தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கையில் ராஜபக்சே என்ற ரத்த பக்சே அரசுடன் சேர்ந்து இந்த படுபாதகத்தை செய்தது. அன்று யாரும் ஏன் என்று கேட்கவில்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமாக தமிழர்களை கொலை செய்தனர்.
அவர்களுக்கு இன்று பிரதமர் மோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். பல்வேறு உதவிகளை செய்துள்ளார். பிரதமர் ஆன்மிக ஈடுபாட்டுடன் இருக்கிறார். எந்த பிரதமராவது கடலில் குளித்தாரா. மோடி கடலில் குளித்தார். சாதுக்களிடம் ஆசிர்வாதம் பெறுகிறார். அவரைப்போல் செயல்பட யாரும் இல்லை.
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு தடை விதித்தாலும் மக்கள் எழுச்சியுடன் திரையில் பார்த்து வருகின்றனர்.
எதை செய்யக்கூடாது என்கிறோமோ அதனை அதிகமாக செய்வார்கள். அடுத்த தேர்தலிலும் மோடி தான் வெற்றி பெறுவார். தமிழகத்தில் காங்., ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது என்றார்.

