நாளை தமிழகம் வருகிறார் சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார்
நாளை தமிழகம் வருகிறார் சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார்
ADDED : அக் 24, 2024 10:27 PM
சென்னை:ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் நாளை தமிழகம் வருகிறார். அவரின், 'விஜய யாத்ரா - 2024 சென்னை' நாளை துவங்குகிறது.
பெங்களூரில் இருந்து, நாளை மாலை, 3:00 மணிக்கு, இளைய சங்கராச்சாரியார் ஒசூர் வருகிறார். மாலை ரத்னகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் அவர், அங்கிருந்து இரவு, காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடம் வருகிறார். துாளி பாத பூஜை நடக்கிறது. பக்தர்களின் வரவேற்பை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஸ்ரீசந்திரமவுலீஸ்வர் பூஜை செய்கிறார்.
அடுத்த நாளும் காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், 28ல் சென்னை வருகிறார். அன்று முதல், நவம்பர் 13 வரை சென்னையில் தங்கி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின், திருப்பதி செல்ல உள்ளார்.
ஸ்ரீசாரதா பீடத்தின், 36-வது பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், தன் சீடராக
ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தை நியமித்துள்ளார். இவர், திருப்பதி தேவஸ்தான வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் சிவசுப்ரமணிய அவதானி -- சீதா நாகலட்சுமி தம்பதிக்கு, 1993 ஜூலை 24ல் பிறந்தவர்.
இவரது பூர்வாசிரம பெயர் வேங்கடேச பிரசாத சர்மா. இவர் வேதத்தையும், சாஸ்திரங்களையும் முழுமையாக படித்தவர். 2015 ஜூன் 23ல் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக உள்ளார். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
கேரள மாநிலம் காலடி கிராமத்தில் பிறந்த ஸ்ரீஆதிசங்கரர். அவரால் தோற்றுவிக்கப்பட்டது கர்நாடக மாநிலம் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்.சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்தியாவின் தென் மாநிலங்களை அன்னிய ஆட்சியில் இருந்து பாதுகாத்த விஜயநகர பேரரசு உருவாக காரணமான பீடம் சிருங்கேரி.
இந்த பீடத்தின், 12ம் குருவான ஸ்ரீவித்யாரண்யர் ஹரிஹரர், புக்கர்களுக்கு ஆசியளித்து விஜயநகர சாம்ராஜ்ஜியம் உருவாக வழிவகுத்தார்.
விஜயநகர பேரரசின் அரசர்கள் அனைவரும், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குருக்களை தங்களது ராஜகுருக்களாக ஏற்றனர். விஜயநகர பேரரசின் புகழ்பெற்ற அரசரான கிருஷ்ண தேவராயரின் குருவாக, ஸ்ரீசாரதா பீடத்தின், 19ம் குருவான ஸ்ரீ இரண்டாம் புருஷோத்தம பாரதீ சுவாமிகள்
விளங்கினார்.
விஜய யாத்ரா 2024 - சென்னை
நிகழ்ச்சி விபரம்
26.10.24 - மாலை 3:00 - 3:30 மணி - பெங்களூரில் இருந்து ஓசூர் வருகை
மாலை 5:30 மணி - ஒசூர் ரத்தினகிரி முருகன் கோவில்
இரவு 8:30 - 10:00 மணி- காஞ்சிபுரம் சிருங்கேரி சங்கர மடம் வருகை. துாளி பாத பூஜை, பக்தர்கள் வரவேற்பு. ஆச்சார்யார் செய்கிற ஸ்ரீசாரதா சந்திரளவுலீஸ்வரர் பூஜை.