உண்டியல் குலுக்குவதை மறந்த கம்யூனிஸ்ட்கள் 'போட்டு தாக்குகிறார்' சீனிவாசன்
உண்டியல் குலுக்குவதை மறந்த கம்யூனிஸ்ட்கள் 'போட்டு தாக்குகிறார்' சீனிவாசன்
ADDED : அக் 15, 2024 06:26 AM
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம், அய்யலுாரில் நேற்று நடந்த அ.தி.மு.க., ஊழியர் கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசன் பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் முதல்வர் பதவிக்கு எல்லாரும் போட்டியிடலாம். ஆனால், ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்கும். கடவுளின் அருள் பழனிசாமிக்கு கிடைத்தது.
அவரின் தலைமையை ஏற்று, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
தி.மு.க., ஆட்சிக்கு, 15 அமாவாசைகளே இருக்கும் நிலையில், 10 அமாவாசைகள் முடிந்தால், தி.மு.க., அணியில் இருக்கும் சில கட்சிகள், அ.தி.மு.க.,வை தேடி வரும் என்று பேசினேன்.
இதற்கு இந்திய கம்யூ., செயலர் முத்தரசன், 'சீனிவாசன் பகல் கனவு காண்கிறார்' என்றார்.
கனவில் பகல், இரவு என்ன... நான் நடக்கவிருக்கும் உண்மையையே சொன்னேன். கம்யூனிஸ்ட்கள் தற்போது உண்டியல் குலுக்குவதையும், மக்களுக்காக போராட்டங்கள் நடத்துவதையும் மறந்து விட்டனர். தி.மு.க., தலைமையிடம் வேண்டியதை பெற்றுக்கொண்டு அமைதியாக உள்ளனர்.
வைகோவும் தனக்கு ராஜ்யசபா எம்.பி., மகனுக்கு லோக்சபா எம்.பி., பதவியுடன் அமைதி காக்கிறார். முஸ்லிம் கட்சிகளும் வேண்டியதை பெற்றுக் கொண்டு அமைதியாக உள்ளன. தமிழகத்தில் மக்களுக்காக அ.தி.மு.க., மட்டுமே குரல் தந்தும், போராட்டங்களையும் நடத்துகிறது.
இவ்வாறு பேசினார்.

