உதயநிதி குறித்து அவதுாறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
உதயநிதி குறித்து அவதுாறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
UPDATED : டிச 16, 2024 02:53 PM
ADDED : டிச 16, 2024 06:48 AM

சென்னை: மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார். அதில், கூறியிருந்ததாவது:
என்னது பதற்றத்தில் ஏதேதோ பிதற்றுகிறீர்கள். உதயநிதி மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார்.
பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார். நீங்கள் என்னடான்னா, இரண்டு சீட்டுக்கு பிளாஸ்டிக் சேர்ல உட்கார்ந்து, கைகட்டி, வாய் பொத்தி இருந்துட்டு, அரசியலுக்காக சனாதனத்தை இழுப்பது கேவலமாக இல்லையா. சும்மா அடங்க மறு, அத்துமீறு என்று சொன்னால் பத்தாது. ஆண்மகனாக இருந்தால் அதைச் செயல்படுத்த வேண்டும்.
உங்கள் கட்சி அழுத்தத்திற்கு ஆளாகி விட்டு, சனாதனத்தை குடைய பார்த்தால், பிறகு உதயநிதிக்கு கோபம் வந்து, அடுத்த தேர்தலில், ஒரு சீட் தான் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்; யோசித்து எழுத வேண்டும்.
உதயநிதி வெளியில் வேண்டுமானால் எதிர்ப்பது போல செய்யலாம். உண்மையில் அவர் சனாதனத்தின் பக்கம் தான் தெரியுமா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர்.
இன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கராஜனை 14 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.