உள்ளாட்சிகளில் குற்றம் செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் ஸ்டாலின் பழனிசாமி குற்றச்சாட்டு
உள்ளாட்சிகளில் குற்றம் செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் ஸ்டாலின் பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 11, 2025 02:49 AM

சென்னை:மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பில் ஊழல் செய்த தி.மு.க., மண்டலக்குழு தலைவர்களை காப்பாற்ற, முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், தற்போது குடும்ப ஆதிக்கத்தால் சீரழிந்துள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இரண்டு மடங்கு சொத்து வரி உயர்வு, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு, பல மடங்கு குடிநீர், கழிவுநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை வரி பல மடங்கு உயர்வு என அமல்படுத்தியது. ஆனால், சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் மேம்படுத்தவில்லை.
மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பில், மிகப்பெரிய ஊழல் நடந்து, முன்னாள் உதவி கமிஷனர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உட்பட எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைதானவர்கள் அனைவரும், 'மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கூறியதன் அடிப்படையில்தான், நாங்கள் சொத்து வரியைக் குறைத்தோம்' என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எப்போதும் போல, குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் முதல்வர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட தி.மு.க., மண்டலக்குழுத் தலைவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன், அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் கோவை, நெல்லை மாநகராட்சிகளின் மேயர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததாக, சர்க்காரியா கமிஷனாலேயே கூறப்பட்ட தி.மு.க.,வினர் வசம் இருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேயர், தலைவர்கள் மீது, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி போராட்டங்களை நடத்துகின்றனர்.
உள்ளாட்சி பதவிகள், குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, 'கமிஷன், கலக்சன், கரப்ஷன்' தங்கு தடையின்றி நடப்பதுதான் இதற்கு காரணம். உள்ளாட்சி அமைப்புகள், 'தி.மு.க.,வினரின் குடும்ப ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையோ' என்ற சந்தேகம் எழுகிறது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பேசும், 'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என்பதை வெற்று வாய்வீச்சாகவே மக்கள் பார்க்கின்றனர். வரும் 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

