அரசியலமைப்பு கடமையின் உறுதிமொழியை ஸ்டாலின் மறந்து விட்டார்: அண்ணாமலை
அரசியலமைப்பு கடமையின் உறுதிமொழியை ஸ்டாலின் மறந்து விட்டார்: அண்ணாமலை
ADDED : டிச 10, 2025 06:16 AM

சென்னை: 'திருப்பரங்குன்றத்தில் பக்தர்களை தடுப்பது, ஒரு பிரிவினரின் உணர்வுகளை புறக்கணிப்பது போன்றவற்றை பார்த்தால், முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற நாளில் எடுத்த அரசியலமைப்பு கடமையின் உறுதிமொழியை மறந்து விட்டதாக தெரிகிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக, ஹிந்து எதிர்ப்பு தி.மு.க., அரசுக்கு எதிரான அவமதிப்பு மனுவை விசாரிக்கும்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, 'நீதித்துறை அதிகாரத்தை மீறுவதற்கும், அவமதிப்பதற்கும், இன்று ஒரு தெளிவான நிறுவப்பட்ட முறை உள்ளது' என்பதை அடிகோடிட்டு காட்டுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம் கிராமத்தில் உள்ள மயிலாடும்பாறையில், முருகன் சிலையை மீண்டும் நிறுவும் விஷயத்தில், நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோவில்பட்டியில் உள்ள மண்டுகோவிலில், கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவை ஹிந்துக்கள் கொண்டாட அனுமதித்ததில், நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது.
இவை தனிமைப் படுத்தப்பட்ட தவறுகள் அல்ல. திருப்பரங்குன்றத்தில் பக்தர்களை தடுப்பது, ஒரு பிரிவினரின் உணர்வுகளை புறக்கணிப்பதன் தொடர்ச்சியான, சமீபத்திய அத்தியாயமாகும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தான் பதவியேற்ற நாளில் எடுத்த அரசியலமைப்பு கடமையின் உறுதி மொழியை மறந்துவிட்டதாக தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

