டாஸ்மாக் ஊழல் அச்சத்தில் ஸ்டாலின்: அ.தி.மு.க., பழனிசாமி குற்றச்சாட்டு
டாஸ்மாக் ஊழல் அச்சத்தில் ஸ்டாலின்: அ.தி.மு.க., பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : மே 27, 2025 07:41 AM

கள்ளக்குறிச்சி : ''டாஸ்மாக் ஊழலில் குடும்ப உறுப்பினரை காப்பாற்றவே முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க.,வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கியது. தமிழகத்தில் மன்னராட்சி, வாரிசு அரசியல் நடக்கிறது. அ.தி.மு.க., இருக்கும் வரை அவர்களின் கனவு நிறைவேறாது. வாரிசு அரசியலுக்கு வரும் சட்டசபை தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.
தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வராக அவர் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் சிந்தித்து செயல்படுத்தவில்லை.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தபின், தி.மு.க., முடக்கி வைத்த மக்கள் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். அனைத்து துறைகளிலும் தி.மு.க.,வினர் ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.,வாகும்.
டாஸ்மாக் ஊழலுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடை ஆணை நீக்கப்பட்டால் பல பேர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே பாதுகாப்பாக வைக்கப்படுவர்.
அ.தி.மு.க., எப்படி பா.ஜ., உடன் கூட்டணி வைக்கலாம் என ஸ்டாலின் கேட்கிறார். இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். உங்களுக்கு ஏன் பயம்.
தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்தது என்கிறார். ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் பல கட்சியினர் வந்து எங்களுடன் சேரும் போது நடுங்கி போவீர்.
தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போதையால் சீரழிந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்திற்கு டில்லி செல்லாத ஸ்டாலின், தற்போது டாஸ்மாக் ஊழலால் குடும்ப உறுப்பினருக்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தில் பங்கேற்றுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.