யு.ஜி.சி., முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தமிழகம் அமைதியாக இருக்காது என எச்சரிக்கை
யு.ஜி.சி., முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தமிழகம் அமைதியாக இருக்காது என எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2025 11:39 PM
'கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, தமிழகம் அமைதியாக இருக்காது; போராட்டங்களை முன்னெடுக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
துணை வேந்தர்கள் நியமனத்தில், கவர்னர்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணை வேந்தராகலாம் என்ற, பல்கலை மானிய குழுவின் புதிய விதிமுறைகள், மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடி தாக்குதலாகும்.
மத்திய பா.ஜ., அரசின் இந்த ஏதேச்சதிகார முடிவு, அதிகார குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான், கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும். பா.ஜ., அரசின் கைப்பாவையாக செயல்படும் கவர்னர்களின் கைக்கு, அது செல்லக்கூடாது.
தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களை, நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழகம், கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.
அரசியலமைப்பு சட்டப்படி, கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளது.
எனவே, இந்த புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை, யு.ஜி.சி., தன்னிச்சையாக வெளியிட்டது, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.