'போட்டோ ஷூட்' எடுப்பதில்தான் ஸ்டாலினுக்கு கவனம்: பழனிசாமி
'போட்டோ ஷூட்' எடுப்பதில்தான் ஸ்டாலினுக்கு கவனம்: பழனிசாமி
ADDED : டிச 19, 2024 07:35 PM
சென்னை:வளமான தமிழகம் யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல என்றும், கேரள முதல்வருடன், 'போட்டோ ஷூட்' எடுப்பதில் மட்டும்தான் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்துவதாகவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது நெல்லை மாவட்டத்தின் கல்லுார், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கேரள முதல்வருடன் கைகுலுக்கி, 'போட்டோ ஷூட்' எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலைநாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட தெம்பில்லாதவராக இருக்கிறார்.
வளமிகு தமிழகம், யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல. கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால், அனைத்து குப்பையையும் உடனே அகற்றப்பட வேண்டும். இனி, இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவுக்கு திடமான நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு எடுக்க வேண்டும்:
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.