மக்களின் வரிப்பணத்தை தி.க.,வுக்கு அள்ளி கொடுக்கிறது ஸ்டாலின் அரசு: அர்ஜுன் சம்பத்
மக்களின் வரிப்பணத்தை தி.க.,வுக்கு அள்ளி கொடுக்கிறது ஸ்டாலின் அரசு: அர்ஜுன் சம்பத்
ADDED : அக் 06, 2025 07:35 AM

திருப்பூர் : வள்ளலாரை விளம்பரத்துக்காக தி.மு.க., அரசு பயன்படுத்தி வருவதாக, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உள்ளாட்சி அமைப்புகள் ஊழல்மயமாக உள்ளன. மதுரை, கோவை, திருப்பூர் என பல இடங்களில், துாய்மை பணியாளர் பிரச்னை நீடிக்கிறது.
தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு, பல இடங்களில் தடை, கைது என போலீசார் இடையூறுகளை செய்துள்ளனர். தி.மு.க., அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
வள்ளலார் ஜெயந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை; அவரது கொள்கைகளை பரப்பவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், விளம்பரத்துக்காக வள்ளலாரை பயன்படுத்துகின்றனர்.
திராவிடர் கழகத்தை எதிர்த்து தான், தி.மு.க.,வை அண்ணாதுரை துவங்கினார். ஆனால், இன்று, தி.மு.க., கொள்கைகளுக்கு மாறாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.
திராவிடர் கழகத்திடம், தி.மு.க.,வை அடகு வைத்து விட்டனர். திராவிடர் கழகத்துக்கு, மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கின்றனர்.
கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க, சி.பி.ஐ., விசாரணை தேவை. தமிழக வெற்றிக் கழகத்தை தடை செய்ய வேண்டும்.
அந்த கட்சி நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுமக்களுக்கு இடையூறு தான். கரூர் சம்பவம் தொடர்பாக விஜயை கைது செய்ய வேண்டும்.
தி.மு.க., அரசை விமர்சித்தால் வழக்கு போடுகின்றனர். இதற்கெல்லாம், வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், வரும் 17ம் தேதி கோவையில் நடக்கிறது. அதில், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.