ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் அரசு அ.தி.மு.க., பொதுச்செயலர் கிண்டல்
ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் அரசு அ.தி.மு.க., பொதுச்செயலர் கிண்டல்
ADDED : டிச 06, 2024 07:36 PM
அரியலுார்:''அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை, தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அரியலுாரில் அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2024 எம்.பி., தேர்தலில், 40க்கு 40 வெற்றி பெற்றோம் என்று கூறி வருகிறார். ஆனால், அரியலுார் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். சொல்லப் போனால், 100 சதவீத வெற்றியை அ.தி.மு.க., பெற்றுள்ளது.
அரியலுார் மாவட்டம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. கடந்த ஆட்சியில் அ.தி.மு.க., நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார்; இது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியின்போது 14 மருத்துவ கல்லுாரி, 6 சட்ட கல்லுாரி, வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனைத்து பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
அரியலுார்,- பெரம்பலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இது அரசின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 186 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைந்தனர்.
உடனடியாக 48 கோடியில், அரசே மருந்து தெளித்து, விவசாயிகளை காப்பாற்றியது. விவசாயிகள் நலனில் அக்கறையோடு அ.தி.மு.க., ஆட்சி செயல்பட்டது. விவசாயிகளை மீட்டெடுத்த ஒரே இயக்கம் அ.தி.மு.க., மட்டும் தான்.
காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது மட்டுமல்ல, விவசாயிகளை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., மட்டும் தான். ஆனால். இதையெல்லாம் ஸ்டாலின் மறந்துவிட்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.