இந்தியா - இலங்கை கூட்டுக்குழு மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
இந்தியா - இலங்கை கூட்டுக்குழு மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜன 25, 2024 01:56 AM
சென்னை:'தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க, இந்தியா - இலங்கை இடையே, கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும்' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த, ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையால், 22ம்தேதி கைது செய்யப்பட்டனர். சமீபகாலமாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலை அளிக்கிறது.
இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும். இப்பிரச்னையில், மத்திய அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும். தொடர் கைது நடவடிக்கைகள், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை பறிப்பதோடு, மீனவ மக்களிடையே, அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது. இது, தமிழக மீனவர்களின் கலாசார, பொருளாதார கட்டமைப்பை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, உரிய துாதரக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்தியா - இலங்கை இடையே கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும். இதன்வாயிலாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.