பத்திரப்பதிவுக்கு 18 புதிய வசதிகளுடன் கூடிய 'ஸ்டார் 3.0 சாப்ட்வேர்' பயன்பாட்டுக்கு வந்தது
பத்திரப்பதிவுக்கு 18 புதிய வசதிகளுடன் கூடிய 'ஸ்டார் 3.0 சாப்ட்வேர்' பயன்பாட்டுக்கு வந்தது
ADDED : ஜன 23, 2026 03:04 AM

சென்னை: பத்திரப்பதிவில், 18 புதிய வசதிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட, 'ஸ்டார் 3.0' மென்பொருள் அமலாக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்கள், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில், பல்வேறு புதிய வசதிகளை சேர்க்கும் வகையில், 'ஸ்டார் 3.0 சாப்ட்வேர்' உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, ஸ்டார் 3.0 சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறை இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ள இப்புதிய சாப்ட்வேர் பயன்பாட்டை, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, தலைமை செயலர் முருகானந்தம், பதிவுத் துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பதிவுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 'ஸ்டார் 3.0 ஸ்பிரின்ட் 1 சாப்ட்வேர்' திட்டத்தில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக, 18 புதிய வசதிகள் செயல்படுத்தப்படும்.
சொத்து விற்பனை பத்திரங்களை, காகிதமில்லாமல் இணையவழியில் சமர்ப்பிக்கும் புதிய வசதி, இதில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பொது மக்கள் தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வகையில், தானியங்கி பத்திரம் உருவாக்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது.
மொபைல் போன் வாயிலாக வில்லங்க சான்றிதழ், பத்திரப் பதிவுக்கான 'டோக்கன்' பெறுவது, வழிகாட்டி மதிப்பு அறிவது போன்ற பணிகளுக்காக, 'TNREGINET' என்ற 'வாட்ஸாப்' செயலி துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மை துறையில் உதவி திட்டங்களை வழங்கிய முதல்வர், கால்நடை பராமரிப்பு துறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில், நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகத்துக்கும், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

