எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு விபரம் அளிக்க மாநில தகவல் ஆணையருக்கு 'கெடு'
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கு விபரம் அளிக்க மாநில தகவல் ஆணையருக்கு 'கெடு'
UPDATED : ஜூலை 19, 2025 05:08 AM
ADDED : ஜூலை 18, 2025 10:25 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்கும்படி அளித்த மனு மீது, 12 வாரங்களில் முடிவெடுக்க, மாநில தகவல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் எஸ்.பி.ஆதித்யசோழன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பதவியில் உள்ள எம்.பி., - எம்.எல்.,ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு நவம்பரில், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விண்ணப்பித்தேன்.
அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விபரங்களையும் வழங்க கோரியிருந்தேன். அது நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தேன். இருப்பினும் தகவல்கள் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது, அடிப்படை உரிமையை மீறும் செயல்.
எனவே, ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதி என்.மாலா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண்காசி ஆஜரானார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மேல்முறையீடு மனு மீது மாநில தகவல் ஆணையம், 12 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.