மாநிலம் முழுதும் குடிநீர் பரிசோதனை; நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
மாநிலம் முழுதும் குடிநீர் பரிசோதனை; நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
ADDED : டிச 07, 2024 03:36 AM
சென்னை: மாநிலம் முழுதும் குடிநீரின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை அளிக்க, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய, 57க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகள், கிண்டி கிங் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொது வினியோகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக குளோரின் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு தான் வழங்கப்படுகிறது. ஆனால், குடிநீர் குழாயில் ஏற்படும் சேதம் உள்ளிட்ட காரணங்களால், குடிநீரில் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதை தவிர்க்க, சேதமடைந்த குழாய்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மழைக்காலம் என்பதால், குடிநீரின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எங்கெல்லாம் புகார் வருகிறதோ, அங்கெல்லாம் குடிநீரின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சுழற்சி முறை யில், தினமும், 10 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, அங்கு வழங்கப்படும் குடிநீரின் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை பாதித்த மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் இதை செயல்படுத்த, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதுடன், அனைத்து பகுதிகளிலும், 100 சதவீதம் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.