ADDED : ஜன 05, 2025 12:26 AM
சென்னை:''தமிழகத்தில், 'ஸ்டெம்செல்' தானம் பெறுவதற்கான பதிவேடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
'ஸ்டெம்செல்' சிகிச்சை என்பது, பாதிப்படைந்த உறுப்பை சரிசெய்து, அதன் பழைய செயல் திறனை மீட்டுத் தருவதோடு, பாதிப்படைந்த உறுப்புகளை முழுமையாக புதுப்பிக்கும் செயல்முறை சிகிச்சையாகும்.
ரத்த தானம் செய்வது போல, 'ஸ்டெம்செல்' தானமும் செய்ய முடியும். வளர்ச்சியடைந்த மருத்துவத்தில், ஸ்டெம்செல் தேவை கருதி, தமிழக அரசு ஸ்டெம்செல் தானம் பதிவேடு முறையை அமல்படுத்த உள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கை:
தலசீமியா, மூட்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு, 'ஸ்டெம்செல்' தானம் பெற்று, மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சிகிச்சையில், யார் ஸ்டெம்செல் தானம் அளிப்பது; தானம் அளிக்க தகுதியான நபர்கள் யார்; எதன் அடிப்படையில் ஸ்டெம்செல் தானம் அளிக்கலாம்; எவ்வளவு ஸ்டெம் செல்களை அளிக்க முன்வரலாம்; அவற்றை யார் யாருக்கு அளிப்பது போன்ற தரவுகள், விரிவான தகவல்களை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேகரித்து, பகுப்பாய்வு செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், அத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.
ஸ்டெம்செல் தானம் பதிவேடு விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

