ஒருங்கிணைந்த சொத்துரிமை ஆவணம்: 10 நகரங்களில் வழங்க நடவடிக்கை
ஒருங்கிணைந்த சொத்துரிமை ஆவணம்: 10 நகரங்களில் வழங்க நடவடிக்கை
ADDED : ஜூலை 27, 2025 02:58 AM

சென்னை: தமிழகத்தில், 10 நகரங்களில், ஜி.பி.எஸ்., அடிப்படையில் தயாரிக்கப் பட்ட வரைபடங்களுடன், சொத்து வரி விபரங்கள் சேர்க்கப்பட்ட ஒருங் கிணைந்த சொத்துரிமை ஆவணங்கள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
நாடு முழுதும் நில ஆவணங்களை, டிஜிட்டல் முறைக்கு மாற்ற, மத்திய அரசு, 'நக் ஷா' என்ற திட்டத்தை துவங்கியது.
டிஜிட்டல் முறை இத்திட்டத்தை செயல்படுத்த, முதற்கட்டமாக, 152 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து, மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலுார், தஞ்சாவூர், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, விருதுநகர் மற்றும் கோவை மாநகராட்சியில், ஏழு வார்டுகள் இடம் பெற்றுள்ளன.
இப்பகுதிகளில், நிலம் தொடர்பான அடிப்படை ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதுடன், அதில் சொத்து வரி விபரங்கள் சேர்க்கப்படும்.
இவ்வாறு கூடுதல் விபரங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த சொத்துரிமை ஆவணங்கள், நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்திட்டத்தில், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா வானுார்திகள் வாயிலாக நில அளவை மேற்கொள்ளப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தில், துல்லிய புகைப்படங்கள் தயாரிக்கப்படும்.
வரைபட தயாரிப்பு பணி இந்த படங்கள், நகர நில அளவை வரைபடங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில், ஜி.பி.எஸ்., எனப்படும் புவியிட அமைப்பு புள்ளிகள் பதிவு செய்யப்படும்.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த பணிகள் முடிந்ததும், ஒருங்கிணைக்கப்பட்ட சொத்துரிமை ஆவணம் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பான பணிகள், கடந்த பிப்ர வரியில் துவக்கப்பட்டன. தற்போது வரைபடங்கள், தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதன் வழியே, குறிப்பிட்ட சொத்து எங்கு அமைந்துள்ளது என்ற விபரம், அதன் செயற்கைக் கோள் வரைபடம், நில அளவை வரைபடம், சொத்து வரி விபரங்கள் ஆகியவற்றை, ஒரே சான்றிதழில் பெற வழி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

