5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர்
5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர்
ADDED : பிப் 18, 2026 05:58 AM

சென்னை: ''தமிழகம் முழுதும் நடவு செய்வதற்காக, ஐந்து லட்சம் சந்தன மரக்கன்றுகள், மக்களுக்கு வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக காலநிலை உச்சி மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காலநிலை மாற்றம் என்பது எங்கோ நடக்கும் விஷயம் அல்ல. தமிழகம் போன்ற கடலோர மாநிலங்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை, தினமும் சந்தித்து வருகின்றன.
இதனால், ஒவ்வொரு செயலிலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
சென்னையில் தற்போது, 350 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், 7,738 மின்சார பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. வரும், 2030க்குள் அரசு போக்குவரத்து கழகங்களில், 33 சதவீதம் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் என, திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான சாலை வரி விலக்கு, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, 'ஸ்பாஞ்ச் பூங்கா' திட்டங்கள், பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும். நீலகிரி, கோவை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், கார்பன் சமநிலை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
பசுமை பரப்பு மேம்பாட்டுக்காக, தமிழகம் முழுதும் நடவு செய்வதற்காக, 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள், மக்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் ஒலி மாசு ஏற்படும் இடங்கள் குறித்த வரைபடம், கடலில் மாசு ஏற்படுவதை தடுக்க, நெய்தல் திட்ட ஆய்வறிக்கை, ஆகியவை வெளியிடப்பட்டன.

