ADDED : நவ 17, 2024 06:34 AM
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த அணைக்கான நீர்வரத்து வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து சீரான அளவில் இருந்தது.
இதன் காரணமாக 119 அடி (7,321 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட, அணையில் 117 அடி (6,886 மில்லியன் கன அடி) நீர் இருந்தது.
நவம்பர் மாத இறுதி வரை அணையில் 117 அடி மட்டுமே நீர் இருப்பை பராமரிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் தண்ணீர் முழுதும் தென்பெண்ணை ஆற்றின் விவசாய பயன்பாட்டுக்காக வெளியேற்ற வேண்டும்.
இதன் காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி அணையின் நீர் வரத்திற்கு ஏற்ப வினாடிக்கு 750 கன அடியில் இருந்து, அதிகபட்சமாக 1,350 கன அடி வரை தென்பெண்ணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அணைக்கான நீர் வரத்து முற்றிலும் குறைந்ததால், கடந்த 15ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று லேசான மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 370 கன அடியாக இருந்தது. இருப்பினும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
காலை 6:00 மணி நிலவரப்படி 116.80 அடி, (6,831 மில்லியன் கன அடி) நீர் இருப்பு உள்ளது.