கருங்கல் ஜல்லி மற்றும் எம் - சாண்ட் வரத்து நிறுத்தம்: கட்டுமான துறையினர் அவதி
கருங்கல் ஜல்லி மற்றும் எம் - சாண்ட் வரத்து நிறுத்தம்: கட்டுமான துறையினர் அவதி
ADDED : ஏப் 18, 2025 01:26 AM

சென்னை:'குவாரி, கிரஷர் வேலை நிறுத்தம் காரணமாக, கட்டுமானப் பணிகளுக்கு, கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் வருவது நிறுத்தப்பட்டுள்ளது' என, கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 3,000க் கும் மேற்பட்ட இடங்களில், தனியார் பட்டா நிலங்களில், கருங்கல் குவாரிகள், கிரஷர்கள் செயல்படுகின்றன.
கடும் எதிர்ப்பு
இதில் எடுக்கப்படும் கனிம வளங்களின் எடை அடிப்படையில், நிலவரி விதிக்கும் சட்டம் சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இதற்கு குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நேற்று முன்தினம் முதல், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுதும் வேலை நிறுத்தம் துவங்கி உள்ளதால், கட்டுமானப் பணிகளுக்கான, கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கட்டுமானப் பணிகள் மொத்தமாக முடங்கும் நிலை ஏற்படும்.
பணிகள் முடங்கும் நிலை
இது குறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:
பெரிய அளவிலான கட்டுமான நிறுவனங்களிடம், ஒரு வாரத்துக்கு தேவையான கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் இருப்பு இருக்கும்.
இதை பயன்படுத்தி, சில நாட்களுக்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் சிறிய நிறுவனங்கள், அப்படி இருப்பு வைப்பதில்லை. ஒரு சில நாட்களுக்கான ஜல்லி, எம் - சாண்ட் மட்டுமே இருப்பு இருக்கும்.
வேலை நிறுத்தம் காரணமாக, வரத்து தடைபட்டால், கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்படும். அரசு தலையிட்டு, பேச்சு நடத்தி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.