புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது
புயல், மழையால் கடலுார் முதல் சென்னை வரை...ஸ்தம்பித்தது
UPDATED : நவ 30, 2024 11:15 PM
ADDED : நவ 30, 2024 11:08 PM

சென்ன : வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் மழையால், கடலுார் முதல் சென்னை வரை மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் வெள்ளக்காடாக மாறின; பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியது, விமான நிலையம் மூடப்பட்டது.
வங்கக்கடலில் உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த, 'பெஞ்சல்' புயல், நேற்று மேற்கு திசையில் நகர துவங்கியதால், எதிர்பார்த்தபடி கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மாலை 5:30 மணிக்கு புதுச்சேரி அருகே புயல் கரை கடக்க துவங்கியது.
விடுமுறை
இப்புயலால், நேற்று முன்தினம் முதல் கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்தது; காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது. எட்டு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தின. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
![]() |
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய கனமழை, நேற்றும் தொடர்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
![]() |
மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, ரன்வேயில் நீர் தேங்கியதால், சென்னை விமான நிலையம் மூடப்பட்டது; விமானங்கள் இயக்கப்படவில்லை. ரயில், பஸ்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
டிரைவர்கள் வராததால், குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. சில இடங்களில் பஸ்கள் பள்ளத்தில் சிக்கியதை காரணம் காட்டி, பணிமனைக்கு வந்த டிரைவர்கள் பஸ்களை எடுக்க மறுத்தனர். அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு நடத்திய பிறகே, பஸ்கள் இயங்கின.
![]() |
பெரும் செலவில் மழை நீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணிகள் செய்துள்ளதால், நகரில் எங்குமே தண்ணீர் தேங்காது என அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறி வந்தனர்.
பலன் இல்லை
அதை முற்றிலும் மறுக்கும் வகையில், நகரில் ஏராளமான பகுதிகளில், சாலைகள் நீரில் மூழ்கின. அண்ணா சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ஜி.எஸ்.டி., சாலை போன்ற அகலமான சாலைகளிலும் தரை தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.
நகரம் முழுதும் மோட்டார் வைத்து குழாய்கள் வழியாக தண்ணீரை உறிஞ்சி அகற்றும் பணி நடப்பதை பார்க்க முடிந்தது. ஆனால், உறிஞ்சிய தண்ணீரை சாலையின் மறுபக்கமே விட்டதால், எந்த பலனும் இல்லாமல் போனதை மக்கள் பார்த்தனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளிலும், மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் இதே பிரச்னை தெரிந்தது. வடிகால்கள் ஏற்கனவே நிரம்பி செல்வதால், மோட்டார் வைத்து உறிஞ்சும் நீரை விடுவதற்கு இடமில்லை.
![]() |
'ஆக்கிரமிப்புகள் அடியோடு ஒழிக்கப்படும் வரையில், வடிகால் மற்றும் சாக்கடை அடைப்புகள் தொடரத்தான் செய்யும். மழை நீர் செல்ல வழியே இல்லை' என, ஒரு சில அதிகாரிகள் விரக்தியுடன் குறிப்பிட்டனர்.
வெளியூர்களில் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்த டிராக்டர்களை எல்லாம், சென்னை மாநகராட்சி தேவைக்காக வரவழைத்தும், தண்ணீர் தேங்கும் பிரச்னையை தீர்க்க முடியாமல் போனதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இன்றும் மழை தொடர்ந்தால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு, மேலும் ஒரு நாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை சென்னைக்கு, 110 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு, 120 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
பின்னர் அது, வடமேற்கு திசையில் இருந்து விலகி, மேற்கு திசையில் நகர துவங்கியது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, நேற்று மாலை கரையை கடக்ககூடும் என, கணிக்கப்பட்டது.
அதன்படி, மாலை ஐந்தரை மணி தாண்டியதும், புதுச்சேரி அருகே புயல் கரை கடக்க துவங்கியது என, வானிலை மையம் ஏழு மணிக்கு தெரிவித்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில், 21 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று, 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பத்துார், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், 12 செ.மீ., வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில், கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் கரையை கடந்தாலும், தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் இன்றும், நாளையும் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என, வானிலை மையம் கூறியுள்ளது.