'போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
'போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
ADDED : பிப் 26, 2024 02:22 AM
போதைப் பொருள் கடத்தலில் சிக்கியிருப்போர் குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
டில்லியில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்த கும்பலை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக பணியாற்றிய ஜாபர் சாதிக் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவருடைய சகோதரரான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கும் கடத்தலில் தொடர்பு உள்ளது; ஜாபர் சாதிக்கிற்கு துணையாகச் செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில், 3,500 கிலோ போதைப் பொருட்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம்; அதன் வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது, போலீசாரால் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், கடத்தல் வாயிலாக கிடைத்த பணத்தை, தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க பயன்படுத்தி உள்ளார்.
போதைப் பொருட்கள் கடத்தல் வாயிலாக கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை, தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியிடம் வழங்கி உள்ளார்; அதற்கான புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
மற்றொரு தேடப்படும் நபரான முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நிதி வழங்கி உள்ளார்; அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
தமிழ் திரைத் துறையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன், இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாகி இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை போதைப் பொருட்களின் தாக்கம் பரவியிருப்பதையும் குறிப்பிட்டு, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரியுள்ளேன்.
இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
தற்போது, தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரே, மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பதும், அதன் பின்னணி குறித்தும் பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இந்த சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதை தவிர்க்கவும், போதைப் பொருட்கள் புழக்கம், நம் நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதையும் மனதில் கொண்டு, உடனடியாக தமிழக அரசு, போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

