படிக்கும் போதே பள்ளிக்கு உதவிய மாணவர்கள் உடுமலை அருகே அசத்தல்
படிக்கும் போதே பள்ளிக்கு உதவிய மாணவர்கள் உடுமலை அருகே அசத்தல்
ADDED : பிப் 17, 2024 02:28 AM

உடுமலை;கல்வி கற்பித்த பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக, உடுமலை உடுக்கம்பாளையம் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் மாறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையின் கடைக்கோடி கிராமமான, உடுக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தங்கள் படித்த பள்ளியை விட்டுச்செல்லும் இறுதி நாட்களில், ஞாபகமாக இருப்பதற்கு சுவர்களில் பெயர்களை எழுதுவது, கதவு, ஜன்னல் போன்றவைகளை உடைத்து செல்வதுமாகவே பெரும்பான்மையான நிகழ்வுகள் நடக்கின்றன.
மாணவர்களாக இருப்பவர்கள், பல ஆண்டுகள் கடந்து முன்னாள் மாணவர்களாக மாறிய பின் தான், படித்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவுகின்றனர்.
இத்தகைய நிலையில், படிக்கும் போதே தங்களின் ஞாபகமாகவும், பள்ளிக்கு நன்றி செலுத்தும் வகையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள்.
பள்ளி தலைமையாசிரியர் சந்திரன் கூறியதாவது:
தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்கள், 43 பேர் தங்கள் படித்த வகுப்பறைகள் உள்ள கட்டடம் முழுவதையும், அவர்களின் சுய முயற்சியால் சுத்தம் செய்து, சுவர்களுக்கு வண்ணம் பூசியுள்ளனர்.
மேலும், மின்விசிறி இல்லாத வகுப்பறைகளுக்கு இரண்டு மின்விசிறி வழங்கியுள்ளனர். இனி வரும் மாணவர்களுக்கும், இப்போது உள்ளவர்களுக்கும், சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.