10 நிமிடத்தில் முடிந்த ஏ.டி.எம்., கொள்ளை 'மேவாட்' கொள்ளையர் பற்றி 'திடுக்' தகவல்
10 நிமிடத்தில் முடிந்த ஏ.டி.எம்., கொள்ளை 'மேவாட்' கொள்ளையர் பற்றி 'திடுக்' தகவல்
ADDED : செப் 28, 2024 10:33 PM

நாமக்கல்:ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிப்பதை, 'மேவாட்' கொள்ளையர்கள் 10 நிமிடத்தில் முடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில், கடந்த 27ல், மூன்று ஏ.டி.எம்.,களில் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர்.
அவர்களை, நாமக்கல் மாவட்டம், வெப்படை அடுத்த செட்டியார்கடை என்ற காட்டுப்பகுதியில், நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
குண்டு காயம்
துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தின், 37, சம்பவ இடத்திலேயே பலியானார். குண்டு காயத்துடன், அசர் அலி, 28, என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து, கன்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது, 'ஹூண்டாய் கிரெட்டா' என்ற வெள்ளை நிற சொகுசு காரையும், ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடிக்கப்பட்ட 66 லட்சம் ரூபாயையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும், கன்டெய்னரில் பதுங்கி இருந்த இர்பான், 32, சவுக்கீன் கான், 23, முகமது இக்ரம், 42, சபீர், 26, முபாரக், 18, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள், ஹரியானா மாநிலம், மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம், தமிழகம், கேரளா, ஆந்திரா மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறியதாவது:
கேரளா ஏ.டி.எம்., கொள்ளையை முடித்துவிட்டு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.,மில் கொள்ளையடிக்க இந்த கும்பல் திட்டமிட்டுஉள்ளது. அதற்காகவே, 'கூகுள் மேப்' உதவியுடன், திருச்சூரில் இருந்து குமாரபாளையம் வந்துள்ளனர். சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னரே போலீசில் சிக்கி உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், சபீர் கான், சவுக்கீன் கான் ஆகியோர் டில்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் லாரியை எடுத்துக் கொண்டு, கேரள மாநிலம் திருச்சூர் சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் திருச்சூர் வரும் முன், முகம்மது இக்ரம் ஒரு வாரத்திற்கு முன்னரே திருச்சூர் சென்று எந்தெந்த ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடிக்கலாம் என நோட்டமிட்டுள்ளார்.
காரில் சென்று கொள்ளை அடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியுடன் செல்லும் போது தான் சிக்கினர். 2021ல் மஹாராஷ்டிராவில் ஒரு ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்த இதே கும்பல் சிக்கி உள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடித்ததும் இவர்கள் தான். ஏ.டி.எம்., கொள்ளை கும்பல் பிடிபட்டதையடுத்து, ஆந்திர போலீசாரும் வெப்படை வந்து விசாரணை நடத்தினர்.
ஒடிசா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் நடந்த ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் விரைவில் விசாரணை நடத்தப்படும்.
ஏ.டி.எம்.,களை குறி வைத்து கொள்ளையை வெற்றிகரமாக முடிப்பது, 'மேவாட்' கொள்ளையர்களின் ஸ்டைல். இந்த கும்பலில் மொத்தம் 60 முதல், 70 பேர் வரை உள்ளனர். ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்து கொள்ளை அடிப்பது இவர்களின் வாடிக்கை.
பணப்பரிமாற்றம்
ஒரு ஏ.டி.எம்.,மில் நுழைந்தால், 10 நிமிடத்தில் கொள்ளையடித்து தப்பி விடுவர். இவர்களுடன் யார் யார் தொடர்பில் உள்ளனர்; அனைவரின் வங்கி கணக்குகள், பணப்பரிமாற்றம், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூறினர்.
விசாரணைக்கு பின், நேற்று குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொள்ளையர்களை அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.