ADDED : டிச 06, 2024 08:01 AM
சென்னை : மோசடி, முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வந்த நிலையில், நிர்வாக காரணங்கள் என்ற அடிப்படையில், ஒன்பது மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகப் பணிகளை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும், மாவட்ட பதிவாளர்கள் உள்ளனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் பத்திரங்களை, திரும்ப அளிப்பதில் தாமதம் செய்வது உள்ளிட்ட புகார்கள் வந்தன.
இதை ஆய்வு செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை உத்தரவிட்டது.
இதில் சில மாவட்ட பதிவாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், மத்திய சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை தெற்கு, திருப்பூர், ஊட்டி, விருதுநகர், பெரியகுளம் ஆகிய பகுதிகளின் மாவட்டப் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.
இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத் பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.