நிதி நிறுவன மோசடி வழக்கு முகவர்கள் 100 பேருக்கு 'சம்மன்'
நிதி நிறுவன மோசடி வழக்கு முகவர்கள் 100 பேருக்கு 'சம்மன்'
ADDED : ஜன 17, 2024 03:14 AM
சென்னை : நிதி நிறுவன மோசடி வழக்குகளில் சிக்கிய முகவர்கள் 100 பேருக்கு, போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த, ஆருத்ரா, ஐ.எப்.எஸ்., மற்றும் எல்பின் உள்ளிட்ட எட்டு பெரிய நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக தமிழகம் முழுதும், 2.91 லட்சம் பேரிடம், 14,168 கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளன.
இந்நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குனர்கள், முகவர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் துபாயில் பதுங்கி இருந்த, ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், 84,000 பேரிடம், 5,900 கோடி ரூபாய் மோசடி செய்த, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, ஐ.எப்.எஸ்., நிறுவனத்தின் இயக்குனர்கள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன் உள்ளிட்டோரை, போலீசாரால் நெருங்க முடியவில்லை. மூவரும் துபாயில் பதுங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.
இதற்கிடையே, ஆருத்ரா, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட எட்டு பெரிய நிதி நிறுவனங்களின் முகவர்கள் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். இவர்கள், உயர்மட்ட முகவர்கள் என, தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பண மோசடி நடப்பது தெரியும். ஆனால், கமிஷன் தொகைக்காக முதலீட்டாளர்களை மூளைச் சலவை செய்து, பணத்தை பறிகொடுக்க வைத்துள்ளனர்.
இதனால், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த முகவர்கள், 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 100 பேருக்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். ஏழு நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த முகவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க, போலீசார்திட்டமிட்டுள்ளனர்.

