" நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்" - உறுதியாக சொல்கிறார் தினகரன்
" நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்" - உறுதியாக சொல்கிறார் தினகரன்
UPDATED : மார் 24, 2024 09:07 AM
ADDED : மார் 24, 2024 08:53 AM

சென்னை: ' மீண்டும் எனக்கு தேனி மக்கள் வாய்ப்பு தருவார்கள் ' பெரும் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிடும் கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன்படி தேனியில் தினகரனும், திருச்சியில் செந்தில்நாதனும் போட்டி யிடுவதாக தினகரன் அறிவித்தார்.
தேனியில் பிரசாரத்தை துவக்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்;
மக்கள் என்னை அவர்களது வீட்டு பிள்ளையாக கருதுகின்றனர். நான் தொகுதிக்காக அயராது உழைத்துள்ளேன். நான் பிறந்தது தஞ்சாவூர், நான் அரசியலில் பிறந்தது தேனி மண். இப்பகுதியில் நான் மக்களோடு மக்களாக பணியாற்றி உள்ளேன். மக்கள் செல்வர் என்ற பட்டமே எனக்கு கிடைத்துள்ளது. பிரசாரத்தில் எனக்கு வரும் வரவேற்பை பாருங்கள்.
தேனியில் போட்டியிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் ரவீந்திரநாத், தொகுதி மக்கள் விரும்புகின்றனர். தேனியில் பணியாற்ற காலம் ஒரு வாய்பை தந்துள்ளது. மீண்டும் எனக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள். எதையும் செயலில் காட்டுபவன். தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இங்கு போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர்.
பிரதமர் மோடி நம்மோடு
தொகுதி வளர்ச்சிக்கு துணையாக இருப்பேன். தமிழகத்தின் அனைத்து வளர்ச்சிக்கும், திட்டங்கள் பெறுவதிலும் முனைப்புடன் செயல்படுவேன். கடந்த 10 ஆண்டுகாலமாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்பவர் பிரதமர் மோடி. பொருளாதாரம், உலக அளவில் முன்னேறி உள்ளது. அவர் மீண்டும் பிரதமராவார். இது ஊரறிந்த உண்மை. பிரதமரே நம்மோடு இருப்பதால் அனைத்து திட்டங்களையும் உரிமையோடு பெற்று தருவேன்.
இதனால் நானும் மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். வரும் காலத்திலும் பா.ஜ.,வுடனான கூட்டணி தொடரும். இவ்வாறு தினகரன் கூறினார்.

