'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் விடிய விடிய நடந்த விசாரணைக்கு பின் விடுவிப்பு
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் விடிய விடிய நடந்த விசாரணைக்கு பின் விடுவிப்பு
UPDATED : ஜூன் 18, 2025 01:02 AM
ADDED : ஜூன் 17, 2025 11:28 PM

சென்னை:சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, ஏ.டி.ஜி.பி., ஜெயராம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவருக்கு, புதிய உடை, விரும்பிய உணவு, பழச்சாறு வாங்கி கொடுத்து போலீசார் கவனித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், 23; தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, ஆகியோர், கடந்த ஏப்ரலில் காதல் திருமணம் செய்தனர்.
இந்த தம்பதியை பிரிக்க, மதுரையைச் சேர்ந்த, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட பெண் போலீஸ் மகேஸ்வரி, 48; ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., ஜெயராம், 59; புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் முயற்சி செய்துள்ளனர்.
அவர்களின் ஆலோசனைப்படி, கடந்த 7ம் தேதி இரவு 12:30 மணியவில் வீட்டு மாடியில் துாங்கிய தனுஷ் தம்பியான, 17 வயது சிறுவனை கடத்தியுள்ளனர். அதிகாலை 3:00 மணியளவில், ஏ.டி.ஜி.பி., ஜெயராமுக்கு அரசு வழங்கியுள்ள, 'இன்னோவா' காரில் சிறுவனை அழைத்துச் சென்று, அவரின் வீட்டருகே விட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட போலீசார், விஜயஸ்ரீ தந்தை வனராஜ், மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். ஏ.டி.ஜி.பி., ஜெயராமனிடம் விசாரணை நடத்தவும், ஜெகன்மூர்த்தியை கைது செய்யவும் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 'ஜெயராமை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் ஜெகன்மூர்த்தி தனியாக ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே, சீருடையில் இருந்த ஜெயராமை, திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
அவரை திருவாலாங்காடு காவல் நிலையம் அழைத்துச் சென்று, நேற்று அதிகாலை 2:30 மணி வரை விசாரித்தனர்.
அதன்பின், அதிகாலை 3:00 மணியளவில், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர் செய்து, சிறையில் அடைக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெளிநபர்கள்
தொடர்ச்சி 7ம் பக்கம்
அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், ஜெயராம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தஜெயராமுக்கு பணிவிடை செய்ய, எஸ்.பி., பிரிவு ஏட்டுகள் என அழைக்கப்படும், மூன்று போலீசார் நியமிக்கப்பட்டனர். ஜெயராம் கேட்ட பொருட்களை எல்லாம், அவர்கள் வாங்கிக் கொடுத்தனர்.
ஜெயராமுக்கு புதிய உடைகள், துண்டு, குளியல் சோப், முக பவுடர் உள்ளிட்ட பொருட்களும், விரும்பிய உணவுகளையும் வாங்கி கொடுத்து கவனித்துக் கொண்டனர். நேற்று மாலை 3:00 மணியளவில், ஜெயராம் மீண்டும் திருவாலாங்காடு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு விசாரணைக்கு ஆஜரான எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தி முன் அமர வைக்கப்பட்டார். இருவரிடமும் டி.எஸ்.பி., தமிழரசி விசாரித்து வாக்குமூலம் பெற்றார். ஜெயராமிடம் மாலை 6:00 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. அதன்பின், காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டு, சொந்த வாகனத்தில் ஜெயராம் புறப்பட்டுச் சென்றார்.
மீண்டும் விசாரணை
விசாரணைக்கு பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம், ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் கூறுகையில், “யாரையும் விடுவிக்கவில்லை; தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம்,” என்றார்.
- டில்லி சிறப்பு நிருபர் -