ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து
ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து
ADDED : ஏப் 16, 2025 12:54 AM

சென்னை:பெண் போலீஸ் உள்நோக்கத்துடன், பாலியல் புகார் அளித்தது தெரிய வந்ததால், ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசில், வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்தவர் மகேஷ்குமார்; ஐ.பி.எஸ்., அதிகாரி.
இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் போலீஸ் ஒருவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, தற்போது தீயணைப்பு துறை டி.ஜி.பி.,யாக உள்ள, சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரித்தது.
புகாரில் உண்மைத்தன்மை இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக அறிக்கை சமர்பித்ததால், மகேஷ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
விசாகா குழுவின் தொடர் விசாரணையில், புகார் கூறிய பெண் போலீசுக்கும், மகேஷ்குமாருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததும், பெண் போலீஸ் உள்நோக்கத்துடன் புகார் அளித்ததும் தெரியவந்தது. இதுகுறித்தும், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு விசாகா குழு அறிக்கை அளித்துள்ளது.
இதையடுத்து, அவரது பரிந்துரையை ஏற்று, மகேஷ்குமார் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவை, தமிழக அரசு ரத்து செய்துள்ளது.