ரூ.7,000 லஞ்சம் பெற்ற தாலுகா ஆபிஸ் பதிவு எழுத்தர் கைது
ரூ.7,000 லஞ்சம் பெற்ற தாலுகா ஆபிஸ் பதிவு எழுத்தர் கைது
ADDED : ஜன 24, 2026 07:10 AM

கோவை: வாரிசு சான்றிதழுக்காக, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கோவை வடக்கு தாலுகா அலுவலக பதிவு எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
கோவை,வெள்ளகிணறு அருகேயுள்ள உருமாண்டபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வாரிசு சான்றிதழ் தொலைந்து விட்டது. இதனால், அவரிடமிருந்து ஜெராக்ஸ் மற்றும் ஆவணங்களை இணைத்து புதிய வாரிசு சான்றிதழ் வழங்க கோரி, கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு புதிய வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் கையெழுத்திட்டார்.
பின்னர், சான்றிதழ் பெறுவதற்காக ஆவண காப்பாக, பதிவு எழுத்தர் ஹரிஹரனை, 32, சந்தித்தார். அப்போது, 7,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், சான்றிதழ் தருவதாக ஹரிஹரன் கூறினார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று விஜயகுமார் கூறிய போதும், ஹரிஹரன் சான்றிதழ் கொடுக்க மறுத்தார்.
இதனால், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார் கொடுத்த விஜயகுமாரிடம், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று கொடுத்து அனுப்பினர். விஜயகுமார், 7,000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்து விட்டு வந்தவுடன், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார், ஹரிஹரன் அறையில் சோதனை நடத்தினர்.
அங்கு மறைத்து வைத்திருந்த 7,000 ரூபாய் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். ஹரிஹரனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

